மராட்டியத்தில் கடும் வெயில்; 25 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் கடும் வெயில்; 25 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 May 2022 6:34 AM GMT (Updated: 3 May 2022 6:34 AM GMT)

மராட்டியத்தில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் தாக்குதலுக்கு 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.




நாசிக்,



இந்தியாவில் நடப்பு ஆண்டில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து டெல்லி, ராஜஸ்தான், மராட்டியம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்பம் கடுமையாக காணப்படுகிறது.  வெப்ப அலையால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.  அனல் காற்றும் வீசி வருகிறது.  வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல்வேறு வடமாநிலங்களில், மாணவர்களின் நலனை முன்னிட்டு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.  எனினும், வெயில் சார்ந்த பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டிய சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், மராட்டியத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெயில் தாக்குதலுக்கு 19 பேர் உயிரிழந்தனர்.  அதற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து நடப்பு 2022ம் ஆண்டில், மராட்டியத்தில் கடுமையான வெயிலால் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 25 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

சுகாதார துறையில் மே 1ந்தேதி வரையில் மொத்தம் 381 வெயில் தாக்குதல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  நாக்பூரில் அதிக அளவாக 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.  அவுரங்காபாத் (5), நாசிக் (4) அடுத்தடுத்து உயிரிழப்பு எண்ணிக்கையில் உள்ளன.  மராட்டியத்தின் நாக்பூரில் அதிக அளவாக 300 பேர் வெயில் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்த 2 நாட்களுக்கு மராட்டியத்தின் பல பகுதிகளில் கடுமையான வெப்பஅலை பரவ கூடிய சூழல் காணப்படும் என்றும் சுகாதார துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.


Next Story