ஜிப்மரில் இந்தி எதிர்ப்பு போராட்டம் - திமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்பட 500 பேர் கைது...!


ஜிப்மரில் இந்தி எதிர்ப்பு போராட்டம் - திமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்பட 500 பேர் கைது...!
x
தினத்தந்தி 9 May 2022 10:26 AM GMT (Updated: 9 May 2022 10:26 AM GMT)

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் இயக்குனராக டாக்டர் ராகேஷ் அகர்வால் உள்ளார்.

இவர் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த சுற்றறிக்கையில், ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குள் என எல்லாவற்றிலும் தலைப்புகள், பணிக்கால கணக்குள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவேண்டும். எதிர்காலத்தில் பதிவேடுகள் சேவை புத்தகங்கள், கணக்குள் அனைத்தும் முடிந்தவரை இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

முற்றுகை போராட்டம்

இயக்குனரின் இந்த சுற்றறிக்கை தமிழகம்-புதுவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழை புறக்கணித்து இந்தி திணிப்ப முயற்சி நடப்பதாக அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

ஜிப்மர் இயக்குனரின் நடவடிக்கையை கண்டித்து ஜிப்மரை முற்றுகையிடப்போவதாக புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன்படி தி.மு.க.வினர் இன்று காலை ஜிப்மர் எதிரே கூடினார்கள்.

தள்ளுமுள்ளு

அங்கிருந்து ஜிப்மரை முற்றுகையிட மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அவர்கள் ஜிப்மர் மெயின்கேட் நோக்கி சென்றபோது போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினார்கள். அதை தள்ளிக்கொண்டு தி.மு.க.வினர் செல்ல முயன்றதால்அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். அப்போது 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், செந்தில்குமரன், சண்.குமாரவேல், கலியபெருமாள், குணா திலீபன், சுந்தரி அல்லிமுத்து, அமுதாகுமார், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், ஜே.வி.எஸ்.சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், அருள்செல்வி, பழனி, தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், முகிலன், வடிவேல், செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், திராவிடமணி உள்பட சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான அனைவரும் போலீஸ் பஸ்சில் ஏற்றி செல்லப்பட்டு கோரிமேடு காவல்நிலையத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டனர். அதன்பின் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முளையிலேயே கிள்ளி

போராட்டத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜிப்மர் ஆஸ்பத்திரியின் மூலம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏழை மக்கள் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த ஆஸ்பத்திரி ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் சீரழிந்துகொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்தவரை இயக்குனராக நியமித்ததால் அவர் இந்த மக்களுடைய மனநிலையையும், தமிழ் உணர்வையும் கொச்சைப்படுத்தும் வகையில் இந்தியை திணிக்கக்கூடிய ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது. புதுவையியல் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடப்பதால் முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுதொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார். அவர் தனது கருத்தை சொல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமைதியை சீர்குலைக்க

மக்களின் உரிமையான தமிழ் மொழிக்காக தி.மு.க. நடத்தும் போராட்டத்தை தடுக்க போலீசாரை குவித்துள்ளனர். போலீசாரின் அடக்குமுறைகளை பார்த்த கட்சிதான் தி.மு.க. மொழி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்கள்தான் தி.மு.க.வினர். தமிழுக்கு இழுக்கு என்றால் நாங்கள் சிறை செல்லவும் தயங்கமாட்டோம்.

இதற்காக எவ்வளவு பெரிய போராட்டத்தையும் நடத்த தயாராக உள்ளோம். ஜிபமர் இயக்குனர் தனது அறிவிப்பினை திரும்பப்பெறாவிட்டால் தலைமை கழகத்தின் அனுமதியை பெற்று ஜிப்மர் இயக்குனர் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம். புதுவையின் அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என்று எச்சரிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேவையான மருந்துகள்

இயக்குனராக ராகேஷ் அகர்வால் வந்தபிறகு ஆஸ்பத்திரிக்கு தேவையான மருந்துகள் வாங்கப்படவில்லை. பிரசவத்துக்கு வருபவர்களிடம்கூட கையுறையை அவர்களே வாங்கி வருமாறு வற்புறுத்துகிறார்கள். 800 பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த பணிகளுக்கு தனியார் மூலம் ஆட்களை வைத்து கையூட்டு பெற்றுள்ளனர். தற்போது நேரடி நியமனம் மூலம் 44 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஒருவர்கூட இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story