கேரளா: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரரின் மனைவி தற்கொலை..!


கேரளா: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரரின் மனைவி தற்கொலை..!
x
தினத்தந்தி 11 May 2022 3:44 AM GMT (Updated: 11 May 2022 3:44 AM GMT)

ஆலப்புழா அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆலப்புழா:

கேரளா, கொல்லம் நகரில் வசிப்பவர் ரெனீஷ். இவருடைய மனைவி நஜீலா (வயது 27). இவர்களது மகன் திப்பு சுல்தான் (5). மகள் மலாலா (1 1/2). ரெனீஸ் ஆலப்புழா காவல் நிலையத்தில் போலீஸ்காரராக செயல்பட்டு வருகிறார். இவர் குடும்பத்துடன் ஆலப்புழா நகரில் ஏ.ஆர். கேம்ஸ் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று அதிகாலை ரெனீஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் 12 மணியளவில் தனது மனைவிக்கு அவர் போன் செய்துள்ளார். எந்தவிதமான பதிலும்  வராததால் மீண்டும் மாலை நேரத்தில் போன் செய்துள்ளார் அப்போதும் மனைவியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. 

உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களை அழைத்து விசாரணை செய்யும்படி  கேட்டுக்கொண்டார். அவர்கள் சென்று பார்த்த போது வீடு பூட்டி உள்ளதாகவும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்கள்.

உடனடியாக கணவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த போது கதவு உள்பக்கம் தாழ் போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த ரெனீஷ் ஆலப்புழா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர்கள் தீயணைப்பு வீரர்கள்  உதவியுடன் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, நஜீலா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டார்.

மேலும், ஒரு துணியை பயன்படுத்தி திப்பு சுல்தானின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும், மகளை பக்கெட் தண்ணீரில் முக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது . போலீசார் 3 பேரின் உடலையும்  மீட்டு ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

போலீசார் விசாரணை செய்தபோது கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story