கோழிக்கோடு விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்துவந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது...!


கோழிக்கோடு விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்துவந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது...!
x
தினத்தந்தி 17 May 2022 8:11 AM GMT (Updated: 17 May 2022 8:11 AM GMT)

கோழிக்கோடு விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்து வந்த 1 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாலக்காடு, 

கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்த போது உடலில் மறைத்து கொண்டுவந்த ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலிபரையும்,அவரை அழைத்துச் செல்ல வந்த மற்றொரு வாலிபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியை சேர்ந்தவர் ஷபீக் ( வயது 30). இன்று காலை துபாயிலிருந்து அரேபிய விமானம் ஒன்று கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த ஷபீக்கை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. 

எனவே,சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று  எக்ஸ்ரே மூலம் பரிசோதனை செய்தனர்.

அப்போது ஷபீக்கின் மலத்துவாரம் அருகே மாத்திரை வடிவில் நான்கு  பொருள் இருப்பது  தெரிய வந்தது. மருத்துவர்கள் உதவியுடன் அந்த மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வெளியே எடுத்து பரிசோதனை செய்தபோது , அதில்  1 கிலோ 9 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பது தெரியவந்தது. 

சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து ஷபீக்கை கைது செய்து விசாரணை நடத்தினர் . அப்போது இவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல வந்த முகமது என்ற வாலிபரையும் கைது செய்து அவர் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Next Story