மனைவியை சந்திக்க அதிக நேரம் ஒதுக்க கோரி சுகேஷ் 19 நாளாக சிறையில் பட்டினி போராட்டம்


மனைவியை சந்திக்க அதிக நேரம்  ஒதுக்க கோரி சுகேஷ் 19 நாளாக சிறையில் பட்டினி போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 5:45 PM IST (Updated: 17 May 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை சந்திக்க அதிக நேரம் ஒதுக்க கோரி சுகேஷ் 19-வது நாளாக சிறையில் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார்.

புதுடெல்லி

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.

அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக அவரது காதலி லீனா மரியாவிடமும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ. 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தது குறிப்பிடப்பட்டு இருந்தது. சுகேஷ் சந்திரசேகர் நடிகையின்   விமானம், அவரது ஓட்டல்  மற்றும் உணவுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது. தற்போது கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இதுவரை 19 நாட்களாக பட்டினியாக இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறின. 

சிறையில் உண்ணாவிரதம் இருந்துவரும் சுகேஷ் சந்திரசேகர், ஒரு சில நாட்கள் மட்டுமே திரவ உணவை எடுத்துக் கொண்டார். அவரது மனிவியும், நடிகையுமான லீனா மரியா பாலும் திகார் சிறையின் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் தனது மனைவியுடன் மாதத்திற்கு இரண்டு முறை சிறைக்குள் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அதிக நேரம் கேட்டு அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த ஏப்ரல் முதல் சிறை எண் 1ல் சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டுள்ளார். 

ஆரம்பத்தில், ஏப்ரல் 23 முதல் மே 2 வரை உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்டார். பின்னர் ஒரு நாள் கழித்து மே 4 முதல் மே 12 வரை மீண்டும்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில், அவருக்கு குளுக்கோஸ்  மற்றும் பிற மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் இன்னும் சாப்பிடவில்லை.  

இவரது உண்ணாவிரத போராட்ட விவகாரம் முழுவதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் இருந்து பெங்களூரு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவரது எடையும் சுமார் ஐந்து கிலோ  வரை குறைந்துள்ளது. 

அதனால் அவரை 24 மணி நேரமும்  கண்காணித்து வருகிறோம். அவர் தனது காதலி லீனா மரியா பாலை, மாதத்திற்கு இரண்டு முறைக்கு மேல் சந்திக்க  விரும்புகிறார்; சிறை விதிகளின் அவ்வாறு சந்திக்க ஏற்பாடு செய்ய முடியாது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.
1 More update

Next Story