ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி கடன் பெற்றவர்களை மிரட்டி பணம் பறித்த 22 பேர் கைது - டெல்லி போலீசார் அதிரடி


ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி கடன் பெற்றவர்களை மிரட்டி பணம் பறித்த 22 பேர் கைது - டெல்லி போலீசார் அதிரடி
x

ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி கடன் பெற்றவர்களை மிரட்டி பணம் பறித்த 22 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

செல்போன் செயலி மூலம் உடனடி கடன் பெறும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இவ்வாறு அதிக வட்டியில் கடன் பெற்றவர்களிடம் கடனை திரும்ப வசூலித்த பின்னரும், மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடப்பதாக நாடு முழுவதும் போலீசில் வழக்குகள் பதிவாகின.

குறிப்பாக கடன் பெற்றவர்கள் மற்றும் அவரது உறவினர்களின் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி இந்த கும்பல் பல கோடி ரூபாயை பறித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக டெல்லி போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த கும்பல் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதில் சீன கும்பலின் பங்களிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 22 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த இந்த நடவடிக்கையில் ரூ.500 கோடி மதிப்பிலான மோசடி தடுக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story