வாரிசு கேட்டு அடம் பிடித்த 2-வது கணவர்; 2 மகள்களை பலாத்காரம் செய்ய வைத்த கொடூர "தாய்"


வாரிசு கேட்டு அடம் பிடித்த 2-வது கணவர்; 2 மகள்களை பலாத்காரம் செய்ய வைத்த கொடூர தாய்
x

தனது சந்தோஷம் பறிபோய்விடுமோ என்ற சுயநலத்தால் தனது இரு பெண் குழந்தைகளின் வாழ்க்கையை சூனியமாக்கிவிட்டார் ஒரு தாய்

திருப்பதி

ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 2007ஆம் ஆண்டு இறந்தார். கணவர் இறந்ததும் தனிமையில் இருந்தார் அந்த பெண்.

இதையடுத்து தனது தாய்மாமன் சதீஷ்குமார் (43) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு சதீஷ்குமாருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நாட்கள் போக போக சதீஷ்குமார் தனக்கென ஒரு வாரிசு வேண்டும், அதனால் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணோ தனக்கு இரு குழந்தைகள் பிறந்ததும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்பதை சதீஷ் குமாருக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால் சதீஷ் குமாரோ அதெல்லாம் தெரியாது, உன்னால் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் நான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

முதல் கணவனை சிறிய வயதிலேயே இழந்த அந்த பெண் இரண்டாவதாக கிடைத்த சந்தோஷ வாழ்க்கையை விட மனமில்லை. அதனால் அந்த பெண், நீ வேறு பெண்ணை எல்லாம் திருமணம் செய்ய வேண்டாம்.

எனது மகள் மூலம் குழந்தை பெற்றுக் கொள் என கூறினார். இதையடுத்து விசாகப்பட்டினத்தில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மூத்த மகளை சதீஷ்குமாரிடம் ஒப்படைத்தார்.

சிறுமியின் கடும் எதிர்ப்பையும் மீறி காட்டுமிராண்டித்தனமாக அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த சிறுமி கர்ப்பம் குறித்து வெளியே தெரிந்தால் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதால் அந்த கருவை கலைத்தனர்.

ஆனால் மீண்டும் சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார். அவர் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சதீஷ்குமார் எனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என அடம்பிடித்துள்ளார்.

எப்படியும் இரண்டாவது மகளை நம்மிடம் ஒப்படைப்பார் என்ற எண்ணத்தில் சதீஷ்குமார் கூறியதை புரிந்து கொள்ளாத அந்த பெண் இரண்டாவது மகளையும் ஒப்படைத்தார். அந்த சிறுமியையும் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இதனால் குழந்தையை தூக்கி கால்வாயில் வீசினர்.

இதையடுத்து இளம்பெண்ணிற்கும் சதீஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனது 2 மகள்களையும் சதீஷ்குமாரிடம் விட்டுவிட்டு விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சதீஷ்குமாரையும் சிறுமிகளையும் அழைத்து வந்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மூத்த மகள் மீண்டும் 3 மாதம் கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் ஏலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அது போல் சிறுமிகளை சதீஷ்குமாருக்கு பலிக்கடாவாக்கிய தாயையும் போலீசார் கைது செய்தனர்.

தனது சந்தோஷம் பறிபோய்விடுமோ என்ற சுயநலத்தால் தனது இரு பெண் குழந்தைகளின் வாழ்க்கையை சூனியமாக்கிவிட்டார்.


Next Story