5ஜி ஏலத்தின் 4 சுற்றுகள் நிறைவு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்


5ஜி ஏலத்தின் 4 சுற்றுகள் நிறைவு - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
x

Image Courtacy: ANI

5ஜி ஏலத்தில் இதுவரை ரூ.1,45,000 கோடி வருவாய் கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் '5ஜி' என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான செயல்திறனை வழங்க உறுதி அளிக்கிறது. இந்த தொலை தொடர்புச்சேவையின்கீழ் இணையதளம் அதிவேகமாக செயல்படும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள 4-ஜி தொலைதொடர்புச் சேவையின் இணையதள வேகத்தை விட இந்த 5ஜி தொலைதொடர்புச்சேவை இணையதள வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடஃபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த ஏலத்தில் 600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ், 2500 மெகா ஹொ்ட்ஸ், 3300 மெகாஹொ்ட்ஸ் மற்றும் 26 கிகாஹொ்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெற்றது.

இந்நிலையில் 5ஜி ஏலத்தின் 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் ஏலத்தை முடித்து வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும், இதுவரை ரூ.1,45,000 கோடி வருவாய் கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், நாளையுடன் ஏல நடவடிக்கைகள் நிறைவடையும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


Next Story