நசீர் உள்பட 6 பயங்கரவாதிகள் சிறையில் அடைப்பு


நசீர் உள்பட 6 பயங்கரவாதிகள் சிறையில் அடைப்பு
x

பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு கைதான 5 பயங்கரவாதிகளின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:-

5 பயங்கரவாதிகள் கைது

பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே சுல்தான் பாளயைாவில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை கடந்த மாதம்(ஜூலை) 19-ந் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். அவர்கள் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளான நசீர் மற்றும் ஜுனைத்துடன் தொடர்பில் இருந்தது தெரிந்தது. இவர்களில், நசீர் கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பில் கைதாகி பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

ஜுனைத் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். கைதான 5 பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், 4 கையெறி குண்டுகள், வாக்கி-டாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. நசீர், ஜுனைத் உத்தரவின் பேரில் பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட 5 பயங்கரவாதிகளும் திட்டமிட்டு சுல்தான்பாளயைாவில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. கைதான 5 பயங்கரவாதிகளையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

6 பேர் சிறையில் அடைப்பு

இதுபோல், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதி நசீரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். பயங்கரவாதிகள் 6 பேரின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில், அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். 5 பயங்கரவாதிகளையும் 2 முறை காவலில் எடுத்து விசாரித்து இருந்ததால், அவர்களை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் முன்வரவில்லை.

இதையடுத்து, 5 பயங்கரவாதிகள் மற்றும் நசீரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, 6 பயங்கரவாதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பரப்பனஅக்ரஹாாரா சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில், பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

என்.ஐ.ஏ. காவலில் எடுக்க...

இதற்கிடையில், பெங்களூருவில் கைதான 5 பயங்ரவாதிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததுடன், லஸ்கர்-இ-தொய்பா அமைப்புடன் 5 பேரும் தொடர்பில் இருந்ததால், அவர்களை காவலி எடுத்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக 4 கையெறி குண்டுகள் எப்படி கிடைத்தது, அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை திரட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் பயங்கரவாதிகள் 5 பேருக்கும் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி வந்திருப்பதால், அதுபற்றியும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதி ஜுனைத்தை கைது செய்யவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர காட்டி வருவதாகவும், இதற்காக சி.பி.ஐ. மூலமாக சர்வதேச போலீசாரின் உதவியை நாடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story