கார்கள் சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 8 பேர் படுகாயம்


கார்கள் சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:46 PM GMT)

மூடிகெரே அருகே கார்கள் சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஹேமாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹேமாவதி ஆற்றின் அருகே உள்ள சாலைகளில் வாகனங்கள் பாதுகாப்பாக செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இந்தநிலையில் மங்களூருவில் இருந்து கார் ஒன்று சிக்கமகளூருவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பனகல் அருகே வந்தபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதை பார்த்த டிரைவர் காரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் நிற்காமல் சென்ற கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதேபோல அதே இடத்தில் மேலும் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் 2 கார்களில் பயணம் செய்த 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற பனகல் போலீசார் 8 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி ைவத்தனர். இந்தவிபத்து குறித்து பனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மூடிகெரே தாலுகா பிலகுலா என்ற இடத்தில் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் அந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் இடிந்து, கார் மீது விழுந்தது. இதில் வாகனம் முழுவதும் சேதம் அடைந்தது. உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து மூடிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story