சண்டிகர் மேயர் தேர்தல்: 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு - நாளை விசாரணை


சண்டிகர் மேயர் தேர்தல்: 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு - நாளை விசாரணை
x

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

சண்டிகர்,

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பொறுப்புக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.

இந்நிலையில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இதில் இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டை அணுகப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. அதன்படி, 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Next Story