அமெரிக்க மந்திரியுடன் பாதுகாப்பு உறவுகள் பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடந்தது; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்


அமெரிக்க மந்திரியுடன் பாதுகாப்பு உறவுகள் பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடந்தது; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
x

இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட விசயங்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்க உறவு முக்கியம் வாய்ந்தது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்ட் ஆஸ்டின் 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவுக்கு நேற்று வருகை தந்து உள்ளார்.

இதனை முன்னிட்டு, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி அவரை முறைப்படி வரவேற்றார். பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்காக முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு திரும்ப வந்து உள்ளேன் என ஆஸ்டின் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு புதுடெல்லியில் இன்று முப்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை அவர் ஏற்று கொண்டார்.

அதன்பின் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை அவர் இன்று சந்தித்து பேசினார். அவரது இந்த பயணத்தில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்புக்கான தொடக்க நடவடிக்கைகள் மற்றும் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே செயல்பாட்டு ஒத்துழைப்பை விரிவாக்கும் முயற்சிகளை தொடருவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஆஸ்டினுடனான சந்திப்பு பற்றி மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், டெல்லியில் எனது நண்பர் ஆஸ்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி.

இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், செயல்திட்ட விருப்பங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது என கூறியுள்ளார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட விசயங்களை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் குறிப்பிட்டார்.

இது ஆஸ்டினின் 2-வது இந்திய பயணம். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச்சில் அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், அவருக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கலை வடிவம் கொண்ட யானை பொம்மை ஒன்றை அன்பு பரிசாக வழங்கினார்.


Next Story