மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு நடுரோட்டில் படுத்துகிடந்த போதை ஆசாமி


மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு நடுரோட்டில் படுத்துகிடந்த போதை ஆசாமி
x

மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு நடுரோட்டில் படுத்துகிடந்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்கமகளூரு:-

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பனகல் அருகே சப்பேனஹள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நடுரோட்டில் இன்டிகேட்டர் விளக்கு ஒளிரவிட்டப்படி மோட்டார் சைக்கிள் கிடந்தது. அதன் அருகிலேயே ஒருவர் கிடந்தார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து, விபத்து நடந்திருப்பதாக நினைத்து பனகல் போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஊழியர்கள் வந்தனர். ஆம்புலன்ஸ் வாகன சத்தம் கேட்டதும், மோட்டார் சைக்கிளுடன் நடுரோட்டில் கிடந்தவர் திடீரென்று கண்விழித்தார். பின்னர் அவரிடம் ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் விசாரித்தனர். விசாரணையில், அவர் ஹாசனை சேர்ந்தவர் என்பதும், சிக்கமகளூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த அவர், மதுகுடித்துவிட்டு ஹாசனுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியாத நிலையில், நடுரோட்டில் இன்டிகேட்டர் விளக்கை ஒளிரவிட்டப்படி மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு, அதன் அருகிலேயே அவர் படுத்துகிடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பனகல் போலீசார் விரைந்து வந்து, அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு குடிபோதையில் படுத்து கிடந்தவர், மோட்டார் சைக்கிளின் இன்டிகேட்டரை ஒளிரவிட்டு இருந்ததால் உயிர்தப்பியதும், இல்லையெனில் அந்த வழியாக சென்ற வாகனம் மோதி அவர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story