மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பெண் பயணியை கொட்டிய தேள்


மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பெண் பயணியை கொட்டிய தேள்
x

மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை நடுவானில் தேள் கொட்டியதில் வலியுடன் பயணித்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. ஏ.ஐ. 630 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை திடீரென நடுவானில் வைத்து தேள் ஒன்று கொட்டியுள்ளது.

இதில், அவர் வலியால் அலறி துடித்து உள்ளார். இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, விமானம் தரையிறங்கியதும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின் அந்த பெண் வீடு திரும்பினார். எங்களுடைய அதிகாரிகள் அவருடன் மருத்துவமனைக்கு சென்றனர். அவர் வீடு செல்லும் வரை அனைத்து வித உதவிகளையும் செய்தனர் என கூறியுள்ளார்.

விமானத்தில் பறவைகள் மற்றும் எலிகள் இருப்பது சில சமயங்களில் நடப்பது உண்டு. இது மிக அரிய நிகழ்வாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, விமானத்தில் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டு அந்த தேளை கண்டறிந்து, விமானத்தில் இருந்து நீக்கினர்.

பயணி ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் அரிய நிகழ்வு மற்றும் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என்று கூறியுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், பெண் பயணிக்கு நடந்த இந்த சம்பவத்திற்காகவும், அசவுகரியத்திற்காகவும் வருந்துகிறோம் என கூறியுள்ளது.


Next Story