அரியானா ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது


அரியானா ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது
x

அரியானா ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானதில் ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.



ரோத்தக்,



அரியானாவில் கராவர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்று திடீரென இன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில், ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின.

சரக்கு ரெயிலானது டெல்லியின் ஷகுர் பஸ்தி நகரில் இருந்து ரோத்தக் வழியே சூரத்கார் நோக்கி சென்று கொண்டிருந்து உள்ளது. அந்த ரெயிலில் நிலக்கரி ஏற்றப்பட்டு இருந்தது. சரக்கு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டதில் அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் பற்றி ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என ரோத்தக் நகர உதவி காவல் ஆய்வாளர் மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் ரெயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியும் பாதிப்படைந்து உள்ளது. ரெயில்வே என்ஜினீயர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ரெயில் போக்குவரத்து மீண்டும் சீரடைவதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.


Next Story