பண்ட்வாலில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி


பண்ட்வாலில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

பண்ட்வாலில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு

மங்களூரு-

பண்ட்வாலில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா அருகே பெருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா (வயது 20). இவர் மங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஆஷாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் உடல் நலம் சரியாகவில்லை.

புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஆஷாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆஷா மேல் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இளம்பெண் சாவு

அங்கு ஆஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆஷாவின் பெற்றோர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். டெங்கு காய்ச்சலுக்கு தட்சிண கன்னடாவில் இளம்பெண் பலியான சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Next Story