ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க முயன்று ரூ.3½ லட்சத்தை இழந்த பெண் என்ஜினீயர்


ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க முயன்று ரூ.3½ லட்சத்தை இழந்த பெண் என்ஜினீயர்
x

சிக்கமகளூருவில் ஆன்லைன் மூலம் பெண் என்ஜினீயர் ஒருவர் அழகு சாதன பொருட்கள் வாங்க முயன்று ரூ.3½ லட்சத்தை இழந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கமகளூரு;

பெண் என்ஜினீயர்

சிக்கமகளூரு மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கொப்பா தாலுகா கொசுவே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்ஜினீயர் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பன்னாட்டு நிறுவனம் ஒன்று ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன்பேரில் அந்த நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகம் வாயிலாக நான் அழகு சாதன பொருட்கள் வாங்க திட்டமிட்டேன். அவ்வாறு ஆன்லைன் மூலம் வாங்கினால் ரூ.5 ஆயிரத்துக்கு ரூ.400 தள்ளுபடி கிடைக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்து இருந்ததால் நான் இந்த முடிவை எடுத்திருந்தேன்.

மோசடி

இவ்வாறாக ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஆன்லைன் மூலம் அழகு சாதன பொருட்களை ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு எந்த பொருட்களும் வரவில்லை. மேலும் எனது பணமும் திருப்பி தரப்படவில்லை. இதுபற்றி கேட்டபோது அந்த நிறுவனத்தார் தங்களிடம் இதுபோல் எந்த வணிக தொடர்பும் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

என்னை யாரோ ஒருவர் ஆன்லைன் மூலம் ஏமாற்றி என்னுடைய ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்தை மோசடி செய்துவிட்டார்.இதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.அதன்பேரில் இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story