காத்துவாக்குல ரெண்டு காதல்...! ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்


காத்துவாக்குல ரெண்டு காதல்...! ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்
x

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இரு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலம் பாண்டா கிராமத்தை சேர்ந்த சந்தீப் ஓரான் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த குசும் லக்ரா என்ற பெண்ணும் 3 வருடங்களாக திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இதனிடையே சந்தீப் கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு பணிபுரியும் சுவாதி குமாரி என்ற இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இவர்களது காதலை சந்தீப் மற்றும் குசும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. தொடக்கத்தில், 2 பெண்களும் முதலில் எதிர்த்தாலும் பின்னர் சந்தீப் சமாதானம் செய்து வைத்தார். இதனால் அவர்களது குடும்பத்தினர் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருவழியாக, 2 பெண்களையும் சந்தீப் திருமணம் செய்து கொள்ள முடிவானது. ஆனால் இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிராமத்தையே எதிர்த்து சந்தீப் தனது காதலிகளான குசும் லக்ரா, சுவாதியை கரம் பிடித்தார். ஒரே சமயத்தில் இருவருக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சந்திப் கூறுகையில், "2 பெண்களை திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் நான் இருவரையும் காதலிக்கிறேன். இவர்களில் ஒருவரை கூட விட்டு பிரிய முடியாது" என்றார்.

சமீபத்தில் வெளியாக திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இதில், இரண்டு பெண்கள் ஹீரோவை காதலிப்பார்கள். அதேபோல, இருவரையும் ஹீரோ காதலிப்பார். ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பார்.

இறுதியில், இரு பெண்களை ஒரே சமயத்தில் காதலிப்பது தவறு என உணர்ந்த ஹீரோ, இருவரையும் விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், ஒரே ஒரு வித்தியாசம். இதில் இரண்டு பெண்களும் காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


Next Story