ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உயிருக்கு அச்சுறுத்தல்; டெல்லி போலீசார் விசாரணை


ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உயிருக்கு அச்சுறுத்தல்; டெல்லி போலீசார் விசாரணை
x

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உயிருக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் பற்றி விசாரணை நடந்து வருகிறது என டெல்லி போலீசார் இன்று கூறியுள்ளனர்.



புதுடெல்லி,



டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் சஞ்ஜீவ் ஜா என்பவர், வடக்கு டெல்லியில் உள்ள சந்த் நகர் புராரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இந்நிலையில், சஞ்ஜீவுக்கு தொடர்ச்சியாக தாதா நீரஜ் பாவனா என்ற பெயரில் பணம் கேட்டு தொலைபேசி வழியே மிரட்டல் வந்துள்ளது. பணம் கொடுக்க தவறினால் கொல்லப்படுவாய் என்றும் தொலைபேசியில் பேசிய நபர் மிரட்டல் விடுத்து உள்ளார். இந்தியாவில் அதிகம் தேடப்படும் கொள்ளை கும்பல் கூட்ட தலைவராக நீரஜ் பாவனா அறியப்படுகிறார். டெல்லி திகார் சிறையில் தற்போது, தண்டனை கைதியாக உள்ளார்.

இவரது சகோதரர் பங்கஜ் ஷெராவத் என்பவருக்கு கடந்த மே 19ந்தேதி இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறிய நிலையில், அவரை சிறை அதிகாரிகள் முன் சரண் அடையும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற இடைக்கால ஜாமீன் பெற்ற ஷெராவத், பின்னர் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன் இல்லாமல், மருத்துவமனையின் அறிவுரையையும் பின்பற்றாமல், சிகிச்சைக்காக என கூறியதில் முரண்பட்டு நடந்து கொண்ட விதம் மற்றும் ஆயுதங்கள் ஏந்திய 8க்கும் மேற்பட்ட நபர்களுடன் 3 முதல் 4 கார்களில் மருத்துவமனைக்கு வந்து, சென்ற காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளன.

இந்த சூழலில், நீரஜ் பாவனா பேரில் சஞ்ஜீவின் உயிருக்கு விடப்பட்ட தொடர் அச்சுறுத்தல் பற்றி விசாரணை நடந்து வருகிறது என டெல்லி போலீசார் இன்று கூறியுள்ளனர்.


Next Story