தாய்லாந்து செல்ல முயன்ற அபிஷேக் பானர்ஜியின் பெண் உறவினர் தடுத்து நிறுத்தம் - அமலாக்கத்துறை நடவடிக்கை


தாய்லாந்து செல்ல முயன்ற அபிஷேக் பானர்ஜியின் பெண் உறவினர் தடுத்து நிறுத்தம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
x

கோப்புப்படம்

தாய்லாந்து செல்ல முயன்ற அபிஷேக் பானர்ஜியின் பெண் உறவினர் குடியேற்றத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி எம்.பி., அவருடைய மனைவி ருஜிரா, அபிஷேக் பானர்ஜியின் மைத்துனி மேனகா கம்பிர் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன.

அபிஷேக் பானர்ஜி, ருஜிரா ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டது. மேனகா கம்பிரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியபோதிலும், அமலாக்கத்துறை இன்னும் விசாரணை நடத்தவில்லை. அவரிடம் டெல்லியில் அல்லாமல் கொல்கத்தாவில் விசாரணை நடத்த ஐகோர்ட்டு கடந்த மாதம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேனகா கம்பிர், தாய்லாந்து செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்தார். ஆனால், அவருக்கு எதிராக அமலாக்கத்துறை சுற்றறிக்கை விட்டிருந்ததால், குடியேற்றத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. அத்துடன் அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்று மேனகாவிடம் தெரிவித்தனர். மேலும், 12-ந் தேதி (இன்று) காலை 11 மணிக்கு கொல்கத்தாவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரிடம் சம்மன் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, மேனகா தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story