புதுச்சேரி முதல்-மந்திரியிடம் ஆசி பெற்ற நடிகர் யோகிபாபு


புதுச்சேரி முதல்-மந்திரியிடம் ஆசி பெற்ற நடிகர் யோகிபாபு
x

வித்தியாசமான கதாபாத்திரம் ஏதாவது நடிக்கிறீர்களா?” என முதல்-மந்திரி ரங்கசாமி கேட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரியாங்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் நடிகர் யோகிபாபு கலந்து கொண்டார். பின்னர் அவர், சட்டசபைக்கு சென்று முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்தார்.

அப்போது யோகிபாபுவிடம் நலம் விசாரித்த ரங்கசாமி, "சொந்த ஊர் சென்னைதானா?" என கேட்டார். அதற்கு யோகிபாபு, "பூர்விகம் ஆற்காடு. பிறந்தது சென்னை. தந்தை ராணுவத்தில் வேலை பார்த்தவர். நானும் ஆசைப்பட்டு ராணுவத்துக்கு சென்று ஓராண்டில் திரும்பி விட்டேன்" என்று குறிப்பிட்டார்.

தற்போது என்ன படம் நடிக்கிறீர்கள்? என்ன படம் வெளியாகி உள்ளது?" என ரங்கசாமி கேட்டார். அதற்கு, "நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்தேன். தற்போது லக்கிமேன் என்ற படம் வெளியாகி உள்ளது" என தெரிவித்த யோகிபாபு, "நீங்கள் படம் பார்ப்பீர்களா?" என கேட்டார். அப்போது முதல்-மந்திரி ரங்கசாமி, "முன்பு நான் தியேட்டருக்கே சென்று படம் பார்ப்பேன். தற்போது அதற்கான நேரமும், வசதியும் இல்லை. ஆனால் சாப்பிடும்போது, வீட்டில் ஓய்வாக இருக்கும்போது டி.வி.யில் ஒளிபரப்பாகும் படங்களை பார்ப்பேன்" என்றார்.

வித்தியாசமான கதாபாத்திரம் ஏதாவது நடிக்கிறீர்களா?" என முதல்-மந்திரி ரங்கசாமி கேட்டார். அதற்கு, "பெண் வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன்" என யோகிபாபு தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட யோகி பாபுவுக்கு திருநீர் இட்டு, நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ரங்கசாமி வாழ்த்தியபோது, அவர் காலில் யோகிபாபு விழுந்து ஆசி பெற்றார்.


Next Story