ரூ.200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் 15-ந் தேதி வரை நீட்டிப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு


ரூ.200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் 15-ந் தேதி வரை நீட்டிப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Nov 2022 10:33 AM GMT (Updated: 11 Nov 2022 10:39 AM GMT)

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நவம்பர் 15-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி போலீஸ் கைது செய்தது. இதற்கிடையே இதுதொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 26-ந்தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. ஜாக்குலினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டார். இதை ஏற்ற கோர்ட்டு ரூ.50 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டு அவருக்கு நவம்பர் 10-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நவம்பர் 15-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story