அதானி விவகாரம்: கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டம்


அதானி விவகாரம்:  கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டம்
x

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


புதுடெல்லி,


கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது. இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் வெளியான அன்று பங்கு சந்தை ஏற்றம் கண்டிருந்தது. எனினும், அதற்கு அடுத்த நாள் சரிவை சந்தித்தது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து நஷ்டத்திலேயே காணப்பட்டன.

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளது. இதனை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதன் எதிரொலியாக, மும்பை, காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அவையில் விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்திற்கு வெளியே ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்டோர் போராடியபடி கூறும்போது, அதானி விவகாரம் அரசால் மூடி மறைக்கப்படுகிறது. இதனை நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அதானி கூறுகிறார். ஆனால் எப்படி? என தெரிவிக்க வேண்டும்.

அதற்கு எங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என கூறி கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.யான டாக்டர் மகுவா மஜ்ஜியும் குரல் எழுப்பினார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதும், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் சூழலும் அதனால், அவை ஒத்தி வைக்கப்படும் நிலையும் ஏற்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என கோரி ஆம் ஆத்மி, பாரத ராஷ்டீரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆகிய எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் கூடி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

எஸ்.பி.ஐ. மற்றும் எல்.ஐ.சி.யை பாதுகாக்க வேண்டும் என கோரியும், கூட்டு குழு விசாரணை தேவை என்றும் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story