பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா, தாவூத் இப்ராகிமுடன் தொடர்பில் இருந்த ஆதிக் அகமது; எப்.ஐ.ஆர். பதிவில் தகவல்


பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா, தாவூத் இப்ராகிமுடன் தொடர்பில் இருந்த ஆதிக் அகமது; எப்.ஐ.ஆர். பதிவில் தகவல்
x

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஐ.எஸ்.ஐ. மற்றும் தாவூத் இப்ராகிமுடன் ஆதிக் அகமதுவுக்கு தொடர்பு இருந்து உள்ளது என எப்.ஐ.ஆர். பதிவு தெரிவிக்கின்றது.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீசார் அழைத்து சென்றபோது மர்ம கும்பல் அவர்களை நேற்றிரவு சுட்டு வீழ்த்தியது.

அவர்கள் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாகவும் வெளிவந்து உள்ளன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அவர்கள் இருவரும் சுடப்பட்ட சம்பவம் எதிரொலியாக, உத்தர பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி பிரயாக்ராஜ் மாவட்ட காவல் ஆணையாளர் ரமீத் சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

ஊடகக்காரர்கள் போன்று வந்த 3 பேர் திடீரென அவர்களை சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில், பத்திரிகையாளர் ஒருவரும் காயம் அடைந்து உள்ளார். கான்ஸ்டபிள் ஒருவருக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளது என கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது என ஆதிக் அகமது கூறி வந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது. இதனால், யாரை பாதுகாக்க இதுபோன்று நடந்து உள்ளது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஆதிக் அளித்த வாக்குமூலம் ஒன்றில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஆகியவற்றுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் ஆளில்லா விமானம் வழியே பஞ்சாப்பில் ஆயுதங்கள் போடப்பட்டன என தெரிவித்து உள்ளார்.

ஆயுதங்களை தங்களுக்கு வழங்கியவர்களின் முகவரி தங்களுக்கு தெரியம் என ஆதிக் மற்றும் அஷ்ரப் போலீசில் கூறியுள்ளனர். ஆனால், சிறையில் இருந்து கொண்டு தங்களால் அவர்களது இடம் பற்றி தெரிவிக்க முடியாது. அந்த இடத்திற்கு அழைத்து சென்றால், அது பற்றி கூற முடியும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

உமேஷ் பால் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அந்த முகவரியில் உள்ள நபரிடம் இருந்தே பெறப்பட்டன என கூறியுள்ளனர். ஐ.எஸ். அமைப்பின் 227 எண் கொண்ட கும்பல் தலைவராக ஆதிக் செயல்பட்டு வந்து உள்ளார். அவரது சகோதரர் அஷ்ரப்பும் அதில் உறுப்பினராக இருந்து உள்ளார்.

வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதும் பாதுகாப்பு முகமைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், ஆதிக்கின் பயங்கவராத செயல்கள் பற்றி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பும் விசாரணை நடத்த கூடிய சூழல் இருந்தது.

முக்தார் அன்சாரி என்பவரின் உதவியுடன் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடனும் ஆதிக் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின் பாகிஸ்தான் வழியேயான ஆயுத கடத்தலில் ஆதிக் கும்பல் ஈடுபட தொடங்கி உள்ளது.

ஆதிக்கின் மகன் ஆசாத் மற்றும் உமேஷ் பால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான குலாம் ஆகியோரின் என்கவுண்ட்டரின்போது வெளிநாட்டு ஆயுதங்கள் பலவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனால், இந்த வழக்கில் பல விசயங்கள் தீவிர விசாரணைக்கு பின்னர் வெளிவர கூடிய சூழல் உள்ளது.


Next Story