சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு கொரோனா மீண்டும் 'கிடுகிடு'வென உயர்வு - 9,629 பேருக்கு தொற்று உறுதி


சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு கொரோனா மீண்டும் கிடுகிடுவென உயர்வு - 9,629 பேருக்கு தொற்று உறுதி
x

கோப்புப்படம்

நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் கிடுகிடுவென அதிகரித்தது. 9 ஆயிரத்து 629 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நாள்தோறும் உயர்ந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு, கடந்த நான்கைந்து நாட்களாக இறங்குமுகமாக இருந்தது. நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் கிடுகிடுவென அதிகரித்தது. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 9 ஆயிரத்து 629 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்தை தாண்டியது. கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில், 11 ஆயிரத்து 967 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 45 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து 3-வது நாளாக குறைந்திருப்பது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. நேற்று 2 ஆயிரத்து 367 குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி, 61 ஆயிரத்து 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 24 பேர் இறந்தனர். நேற்றைய பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரித்தது. இதில், கேரளாவில் விடுபட்ட 10 மரணங்களும் அடங்கும். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 398 ஆக உயர்ந்தது.


Next Story