விலை உயர்வு..! 10 நகரங்களில் மானிய விலையில் வெங்காய விற்பனை


விலை உயர்வு..! 10 நகரங்களில் மானிய விலையில் வெங்காய விற்பனை
x

கடந்த 10 நாட்களில் வெங்காயத்தின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்திருந்தது.

புதுடெல்லி,

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, கையிருப்பில் வைத்துள்ளது. கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இருப்பில் இருந்து முக்கிய சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் வெங்காயத்தின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாகவும், அதிகபட்சமாக கிலோ 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் வகையில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முக்கிய 10 நகரங்களில் இன்று மதியம் முதல் மானிய விலையில் வெங்காயம் விற்பனை தொடங்குகிறது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கடைகள் மற்றும் வாகனங்கள் மூலமாக விற்பனை செய்யப்படும். தலைநகர் டெல்லியில் இன்று முதல் மானிய விலை வெங்காயம் ஒரு கிலோ ரூ.25க்கு நுகர்வோருக்கு கிடைக்கும்.

இதேபோல் நேற்று முதல், சில நகரங்களில் தக்காளி கிலோ 40 ரூபாய் என தள்ளுபடி விலையில் விற்பனையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story