நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
x

 Photo Credit: ANI

தினத்தந்தி 30 Jan 2024 2:20 AM GMT (Updated: 30 Jan 2024 4:30 AM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

பீகாரில் ஆட்சி மாற்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.


Next Story