தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்திக்க அஜித் பவார் முடிவு


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்திக்க அஜித் பவார் முடிவு
x

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று அஜித் பவார் சந்திக்க முடிவு செய்து உள்ளார்.

புனே,

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவார், திடீரென இந்த மாத தொடக்கத்தில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைந்தது மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் சென்றனர். பின்பு அவர், மராட்டிய துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.

இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அஜித் பவார் அணியினர் திடீரென, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேற்று சந்திக்க சென்றனர். அஜித் பவார் அணியை சேர்ந்த மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், ஜிதேந்திரா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுடன் ஹசன் முஷ்ரிப் மற்றும் திலீப் வல்சே பாட்டீல் ஆகியோரும் சென்றிருந்தனர்.

மும்பை நகரில் உள்ள ஒய்.பி. சவான் மையத்திற்கு சென்று அவர்கள் சரத்பவாரை சந்தித்து பேசினர். இதேபோன்று, சரத் பவார் அணியில் ஜெயந்த் பாட்டீல் மற்றும் ஜிதேந்திரா ஆவாத் ஆகியோர் உடனே சென்றனர்.

இதுபற்றி ஜெயந்த் பாட்டீல் கூறும்போது, சுப்ரியா சுலேவிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் ஒய்.பி. சவான் மையத்திற்கு விரைவாக வரும்படி என்னை கேட்டு கொண்டார்.

அஜித் பவார் மற்றும் பிற எம்.எல்.ஏ.க்கள் ஏன் வருகை தந்து உள்ளனர்? என எனக்கு தெரியவில்லை என்று கூறினார். ஏக்நாத் ஷிண்டே அரசில் அஜித் பவார் இணைந்த நிலையில், மும்பையில் இந்த சந்திப்பு நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சரத் பவாருடனான நேற்றைய சந்திப்பு பற்றி பிரபுல் பட்டேல் கூறும்போது, கட்சியின் மூத்த தலைவரை சந்தித்து, கட்சி பிளவுப்படவில்லை என்று உறுதி செய்யும்படி வேண்டுகோளாக கேட்டு கொண்டோம்.

ஆனால், சரத் பவார் எங்களுக்கு பதிலளிக்கவில்லை. நாங்கள் என்ன கூறுகிறோம் என்று அவர் கவனமுடன் கேட்டு கொண்டார். அவரை சந்தித்த பின்னர், நாங்கள் திரும்பி செல்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று அஜித் பவார் சந்திக்க முடிவு செய்து உள்ளார்.

இந்த சந்திப்பு அவரது அணியை சேர்ந்த தலைவர்கள் சந்தித்த 24 மணிநேரத்தில் நடைபெறுகிறது. எனினும், அவர்கள் சந்தித்து விட்டு சென்ற பின்னர், சரத் பவார் கட்சி தொண்டர்களிடம் பேசும்போது, வளர்ச்சிக்கான அரசியலை தொடர்வேன் என்றும் ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்றும் தெளிவுப்படுத்தி உள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் முன்னணியில் நின்று செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது.


Next Story