மத்திய சுகாதாரத்துறை சார்பில் அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு கூடுதலாக 34 மருந்துகள் சேர்ப்பு


மத்திய சுகாதாரத்துறை சார்பில் அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு கூடுதலாக 34 மருந்துகள் சேர்ப்பு
x

அத்தியாவசிய மருந்துகளின் புதிய தேசிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கூடுதலாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாட்டில் தரமான மருந்துகள் அனைத்து மட்டங்களிலும் கட்டுப்படியான விலையில் கிடைப்பதை அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல் உறுதி செய்கிறது. இந்த பட்டியல் கடந்த 1996-ம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 2003, 2011 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது 4-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

திருத்தப்பட்ட இந்த புதிய தேசிய பட்டியலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார்.

அப்போது, "பிரதமர் மோடியின் 'அனைவருக்கும் மலிவான விலையில் மருந்து' என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இது வகை செய்கிறது" என அவர் கூறினார்.

செயல்திறன், முன்னுரிமை, தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துகள் வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அம்சங்களின் அடிப்படையில் மருந்துகள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே தேசிய பட்டியலின் நோக்கமாகும் என்றும் கூறினார்.

இந்த பட்டியலில் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. அவை 27 சிகிச்சை பிரிவுகளுக்கு என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய பட்டியலில் இருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக 4 புற்றுநோய் சிகிச்சை மருந்துகள், சில தடுப்பூசிகள் என புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார், சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story