விரைவில் வாரிய, கழக தலைவர்கள் நியமனம்- துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
விரைவில் வாரிய, கழக தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
சதாசிவ நகர்:-
டி.கே.சிவக்குமார் பேட்டி
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சி தேர்தல், மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்பட்டும். மாநகராட்சி தேர்தல் விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை மதித்து அரசு செயல்படும். அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவது அரசின் கடமையாகும்.
விரைவில் வாரிய தலைவர்கள் நியமனம்
மாநகராட்சியில் எத்தனை வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் என்பதை தற்போது தெரிவிக்க இயலாது. மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். கூடிய விரைவில் வாரிய, கழகங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
வாரியங்களுக்கான தலைவர்களை சிபாரிசு செய்யும்படி எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு பதவி வழங்கப்படும். தொண்டர்களால் தான் கட்சியே செயல்படுகிறது. அன்ன பாக்ய திட்டம் குறித்து முதல்-மந்திரி மற்றும் உணவுத்துறை மந்திரி பேசுவார்கள். இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றும் விவகாரத்தில் நாங்கள் சொன்னபடி நடந்து கொள்வோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.