ஞானவாபி மசூதியின் தொல்லியல் ஆய்வு அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் - மாவட்ட நீதிமன்றம் உத்தரவு


ஞானவாபி மசூதியின் தொல்லியல் ஆய்வு அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் - மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2023 8:40 AM GMT (Updated: 11 Aug 2023 8:56 AM GMT)

ஞானவாபி மசூதியின் தொல்லியல் ஆய்வு அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் என்று மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறை, அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொள்ள அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் இருந்து அதிகாரிகள் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொண்டுவரும் தொல்லியல் துறை நிபுணர்கள் அளிக்கும் அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் அளிக்கப்படும் என்று மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த தரப்பினரும் ஆய்வு தொடர்பான தகவல்களை வெளியிட, கருத்துத் தெரிவிக்க அதிகாரம் இல்லை என்று மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ணா விஷ்வேஷா எச்சரித்துள்ளார்.

மேலும், தொல்லியல் துறை நிபுணர்கள், தங்களது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும், அதைத்தவிர்த்து எந்த தகவலும் ஊடகங்களுக்கோ, சமூக ஊடகங்களுக்கோ தெரியப்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story