ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ராணுவத்தில் பிரிகேடியர் அந்தஸ்து அதிகாரிகளுக்கு பொதுவான சீருடை


ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ராணுவத்தில் பிரிகேடியர் அந்தஸ்து அதிகாரிகளுக்கு பொதுவான சீருடை
x

கோப்புப்படம்

ஆகஸ்டு 1-ந் தேதி முதல் ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்து அதிகாரிகளுக்கு பொதுவான சீருடை அமலுக்கு வருகிறது.

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தில் கர்னல் அந்தஸ்துக்கு மேற்பட்ட அந்தஸ்தில் இருப்பவர்கள் பிரிகேடியர்கள் ஆவர். அவர்களும், அவர்களுக்கு மேற்பட்ட அந்தஸ்துடைய அதிகாரிகளும் ஏதேனும் ஒரு படைப்பிரிவுக்கு தலைமை தாங்குவார்கள். அவர்கள் பெரும்பாலும் தலைமையகங்களில்தான் பணியில் இருப்பார்கள்.

இந்நிலையில், பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்துடைய அதிகாரிகளுக்கு பொதுவான சீருடையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து இச்சீருடையை அமல்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.

தொப்பி

சமீபத்தி்ல நடந்த ராணுவ கமாண்டர்கள் கூட்டத்தில் விரிவான ஆலோசனைக்கு பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டது.

பிரிகேடியர் அந்தஸ்து அதிகாரிகள், எந்த படைப்பிரிவில் இருந்து வந்திருந்தாலும், எப்படி நியமிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு பொதுவான சீருடை அறிமுகப்படுத்தப்படும்.

தொப்பி, தோள்பட்டை பேட்ஜ், கழுத்து பட்டை, பெல்ட், ஷூ ஆகிய உபகரணங்களும் ஒரே சீராக கொண்டுவரப்படும்.

பொதுவான அடையாளம்

படைப்பிரிவு வேறுபாடுகளை கடந்து, ராணுவ உயர் அதிகாரிகளிடையே பணி தொடர்பான விஷயங்களில் பொதுவான அடையாளத்தையும், அணுகுமுறையையும் ஊக்குவிக்கவும், வலுப்படுத்தவும் இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே சமயத்தில், ராணுவ கர்னல் மற்றும் அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளின் சீருடையில் எந்த மாற்றமும் இருக்காது.


Next Story