சர்ச்சை கருத்தால் வீட்டின் மீது தாக்குதல்; யூடியூப் சேனல், தொகுப்பாளர் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி புகார்


சர்ச்சை கருத்தால் வீட்டின் மீது தாக்குதல்; யூடியூப் சேனல், தொகுப்பாளர் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி புகார்
x

சர்ச்சை கருத்தால் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக யூடியூப் சேனல் மற்றும் அதன் தொகுப்பாளர் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி போலீசில் புகார் அளித்துள்ளார்.

மங்களூரு;

இந்து கடவுள்கள் குறித்து

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ைஷலஜா அமர்நாத். வக்கீல். மேலும் இவர், காங்கிரஸ் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷைலஜா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி இந்து அமைப்பினர், ஷைலஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ஷைலஜா வீட்டின் முன்பு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும், அவரது வீட்டு சுவர்களில் கருப்பு மை பூசினர். இதனால் ஷைலஜா, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தொகுப்பாளர் மீது புகார்

இதையடுத்து மர்மகும்பல், ஷைலஜாவுக்கு எதிராக கோஷமிட்டுகொண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்றுவிட்டனர். ஆனால் ஷைலஜா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய மர்மகும்பல் யார், எதற்காக தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து ஷைலஜா, புத்தூர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று ஷைலஜா புத்தூர் போலீசில் மற்றொரு புகார் அளித்தார். அதில் பிரபல யூடியூப் சேனலை தொகுத்து வரும் மும்தாஸ் என்பவர் இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாகவும், அதில் தனது புகைப்படத்தை இணைத்ததாகவும் கூறினார்.

வழக்குப்பதிவு

எனவே தொகுப்பாளர் மும்தாஸ் மற்றும் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story