ஆயுர்வேத மருத்துவத்துக்கு தற்போது அங்கீகாரம் கிடைத்து வருகிறது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்


ஆயுர்வேத மருத்துவத்துக்கு தற்போது அங்கீகாரம் கிடைத்து வருகிறது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
x
தினத்தந்தி 12 Nov 2022 11:19 PM GMT (Updated: 13 Nov 2022 12:17 AM GMT)

அந்நியர் படையெடுப்பால் மக்களிடையே ஆயுர்வேத மருத்துவம் பரவுவது தடுக்கப்பட்டது, தற்போது அது மீண்டும் அங்கீகாரம் பெற்று வருவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார்.

கருத்தரங்கம்

ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவத்தை உள்ளடக்கிய 'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் 'ஆயுர்வேத திருவிழா' என்ற பெயரில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. இதில் மத்திய ஆயுஷ் துறை மந்திரி சர்பானந்த சோனோவால், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-

மீண்டும் அங்கீகாரம்

அன்னியர் படையெடுப்பால் மக்கள் இடையே ஆயுர்வேதம் பரவுவது தடுக்கப்பட்டது. ஆனால் ஆயுர்வேதம் மீண்டும் அதற்குரிய அங்கீகாரத்தை பெற்று வருகிறது. ஆயுர்வேதத்தைவிட சிறந்தது எதுவும் இல்லை.

ஆயுர்வேதத்தை புனிதமாக கையாள வேண்டும். அப்போது தான் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய மந்திரி பேச்சு

மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்த சோனோவால் பேசுகையில், " கடந்த 7 ஆண்டுகளாக ஆயுர்வேதம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று வருகிறது. தனியாக ஆயுஷ் அமைச்சகத்தை அமைத்து ஆயுர்வேதத்தை பிரதமர் மோடி ஊக்கப்படுத்தினார். 2014-ம் ஆண்டு வரை ஆயுஷ் மருத்துவத்துறையின் சந்தை அளவு 3 பில்லியன் அமெரிக்க டாலர் தான்.

ஆனால் கடந்த 8 ஆண்டில் இது 18.1 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து உள்ளது. 2023-ல் இது 23 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆயுர்வேதம் நல்ல நாட்களை (அச்சா தீன்) பார்த்து வருகிறது" என்றார்.


Next Story