நாடாளுமன்ற மேலவையின் அனைத்து கட்சி குழு தலைவர்களுக்கும் நாளை இரவு விருந்து


நாடாளுமன்ற மேலவையின் அனைத்து கட்சி குழு தலைவர்களுக்கும் நாளை இரவு விருந்து
x

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையை சேர்ந்த அனைத்து கட்சி குழு தலைவர்களுக்கும் துணை ஜனாதிபதி நாளை இரவு விருந்து அளிக்க இருக்கிறார்.



புதுடெல்லி,



நாட்டின் துணை ஜனாதிபதியாக இரு மாதங்களுக்கு முன் ஜெகதீப் தங்கார் பொறுப்பேற்று கொண்டார். அவர், நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான ராஜ்யசபையின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையை சேர்ந்த அனைத்து கட்சி குழு தலைவர்களுக்கும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் துணை ஜனாதிபதி தங்கார் நாளை (திங்கட் கிழமை) மரியாதை நிமித்தம் இரவு விருந்து அளிக்க இருக்கிறார்.

இதற்காக அவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. துணை ஜனாதிபதியாக தங்கார் பொறுப்பேற்று கொண்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

இவர்கள் தவிர, அவையின் தலைவர், மத்திய மந்திரி பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி மற்றும் நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினர்களாக உள்ள சில மூத்த மந்திரிகளுக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில், ராஜ்யசபை தலைவரான தங்காரிடம், குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் விவகாரம் பற்றி சில எதிர்க்கட்சிகள் பேச கூடும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story