கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு பசவராஜ் ஹொரட்டி வேட்புமனு தாக்கல்; போட்டியின்றி தேர்வாகிறார்


கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு பசவராஜ் ஹொரட்டி வேட்புமனு தாக்கல்; போட்டியின்றி தேர்வாகிறார்
x

கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தலையொட்டி பசவராஜ் ஹொரட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

பெங்களூரு:

மேல்-சபை தலைவர் பதவி

கர்நாடக மேல்-சபை தலைவராக இருந்தவர் பசவராஜ் ஹொரட்டி. அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்தார். பா.ஜனதாவின் ஆதரவுடன் அந்த பதவியில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அப்போது அவருக்கு மேல்-சபை தலைவர் பதவி வழங்குவதாக பா.ஜனதா உறுதி அளித்து இருந்தது. அதனால் தனக்கு மேல்-சபை தலைவர் பதவி வழங்குமாறு கேட்டு வந்தார்.

மேல்-சபை தற்காலிக தலைவராக ரகுநாத்ராவ் மல்காபுரே பணியாற்றி வருகிறார். அவர் தனக்கு இந்த பதவியை வழங்க வேண்டும் என்று கேட்டு வந்தார். ஆனால் ஏற்கனவே பசவராஜ் ஹொரட்டிக்கு வாக்குறுதி கொடுத்ததால், பா.ஜனதா அவருக்கே அந்த பதவியை வழங்குவது என்று முடிவு செய்தது. இந்த நிலையில் கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு இன்று(புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது.

தனிப்பெரும்பான்மை

இதில் பா.ஜனதா சார்பில் பசவராஜ் ஹொரட்டி நேற்று பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் செயலாளரிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் உடன் இருந்தனர். மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளதால், எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை.

அதனால் பசவராஜ் ஹொரட்டி மேல்-சபை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இன்று இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் இன்றைய தினமே மேல்-சபை தலைவராக பதவி ஏற்க உள்ளார்.


Next Story