இனி ஜிபே, போன் பே... போன்ற ஆப் மூலம் பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படுமா...? தேசிய பரிவர்த்தனை கழகம் விளக்கம்


இனி ஜிபே, போன் பே... போன்ற ஆப் மூலம் பணம் செலுத்தினால் கட்டணம்  வசூலிக்கப்படுமா...? தேசிய பரிவர்த்தனை கழகம் விளக்கம்
x
தினத்தந்தி 29 March 2023 9:57 AM GMT (Updated: 29 March 2023 11:02 AM GMT)

2 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக தொகைகளை ஜிபே, போன் பே, பேடியெம் உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகள் மூலம் அனுப்ப, 1.1 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட தற்போது பண பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன.

இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, ஜி பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆன்லைனில் யுபிஐ மூலம் ரூ.2,000க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சூப்பர் மார்கெட்களில் பொருட்கள் வாங்க பணம் செலுத்த 0.9 சதவீதமும், மியூச்சுவல் பன்டுகள், ரெயில் டிக்கெட்கள், காப்பீடு எடுக்க ஒரு சதவீதம் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. ஆனால் வங்கி கணக்கில் இருந்து பி.பி.ஐ வேலட்டிற்கு பணத்தை மாற்ற கட்டணம் எதுவும் விதிக்கபடவில்லை.

ஜிபே உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகள் மூலம் பணம் செலுத்த 1.1 சதவீத கட்டணத்தை தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் விதித்துள்ளது. இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிக தொகைகளை ஜிபே, போன் பே, பேடியெம் உள்ளிட்ட யு.பி.ஐ செயலிகள் மூலம் அனுப்ப, 1.1 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் ஒன்று முதல் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

இந்த கட்டண தொகையில், 0.15 சதவீதத்தை யு.பி.ஐ செயலி நிறுவனங்கள், பணம் செலுத்தும் வங்கிக்கு அளிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. எரிபொருள் வாங்க 0.5 சதவீதமும், அலைபேசி, கல்வி, விவசாயம் தொடர்பாக பணம் செலுத்த 0.7 சதவீதமும் கட்டணம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தேசிய பரிவர்த்தனை கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது யுபிஐ மூலம் பணி பரிவர்த்தனைகள் செய்வது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும்.

ஏப்ரல் 1-ம் தேதி யுபிஐ செயலிகளில் 2 ஆயிரத்திற்கும் மேல் பண பரிவர்த்தனைகள் செய்தால் 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது டிஜிட்டல் வாலெட்-ஐ கொண்டிருக்கும் வணிக நிறுவனங்களுக்கானது ஆகும்.

எனவே யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் என தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


Next Story