பீகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.78 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த மந்திரி சபை ஒப்புதல்


பீகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1.78 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 2 May 2023 10:15 PM GMT (Updated: 2 May 2023 10:16 PM GMT)

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.

பாட்னா,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1.78 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை கல்வி துறை முன்மொழிந்தது. அதனை ஏற்றுக்கொண்ட மந்திரி சபை முதன்மை வகுப்புகளுக்கு 85,477 ஆசிரியர்கள், நடுத்த வகுப்புகளுக்கு 1,745 மற்றும் உயர் வகுப்புகளுக்கு 90,804 ஆசிரியர்களை பணியமர்த்த ஒப்புதல் வழங்கியது.

இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.சித்தார்த் கூறுகையில், "பல்வேறு வகுப்புகளுக்கு 1.78 லட்சம் ஆசிரியர்களை நியமிக்கும் திட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படும். முழு ஆட்சேர்ப்பு செயல்முறையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்" என கூறினார்.

மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் 30 முதல் கயா மற்றும் முசாபர்பூரில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் டீசலில் இயங்கும் பஸ்கள் மற்றும் ஆட்டோக்களின் இயக்கத்தை தடை செய்வதற்கான போக்குவரத்துத் துறையின் முன்மொழிவுக்கும் மந்திரி சபை ஒப்புதல் அளித்ததாக எஸ்.சித்தார்த் தெரிவித்தார்.


Next Story