மல்லிகார்ஜூன கார்கே, ராகுலுடன் மீண்டும் நிதிஷ்குமார் சந்திப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்த முடிவு


மல்லிகார்ஜூன கார்கே, ராகுலுடன் மீண்டும் நிதிஷ்குமார் சந்திப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்த முடிவு
x

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை மீண்டும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்து பேசியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் டெல்லி சென்றுள்ள அவர், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்

அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேற்று அவர் சந்தித்தார். கார்கே வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஐக்கிய ஜனதாதள தலைவர் லாலன் சிங் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அத்துடன் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களையும் விவாதித்தனர்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளை இணைத்து ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்

இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விரைவில் கூட உள்ளதாக தெரிவித்தார். இதற்கான இடம் மற்றும் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக் கப்படும் என்றும் கூறினார்.

நிதிஷ்குமாருடனான சந்திப்பு குறித்து மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில், 'இனி நாடு ஒன்றுபடும். ஜனநாயகத்தின் பலமே நமது செய்தி. ராகுல் காந்தி யும் நானும் இன்று (நேற்று) பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்து, நாட்டுக்கு புதிய திசையை வழங்கும் செயல்முறையை முன்னெடுத்தோம்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தியை நிதிஷ்குமார் சந்திப்பது கடந்த 1½ மாதங்களில் இது 2-வது முறையாகும்.

கெஜ்ரிவாலுடன் சந்திப்பு

முன்னதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவாலை நேற்று முன்தினம் அவரது வீட்டில் நிதிஷ்குமார் சந்தித்து இருந்தார். அவருடனும் இந்த எதிர்க்கட்சி கூட்டணி குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

மேலும் டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் நடந்து வரும் மோதலில், கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை உறுதிப் படுத்துவது போல, கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த புதிய அரசு பதவியேற்பு விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் நிதிஷ்குமார் அடுத்தடுத்து சந்திப்புகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story