"உன் மகிழ்ச்சி தான் முக்கியம்" கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்


உன் மகிழ்ச்சி தான் முக்கியம் கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்
x
தினத்தந்தி 8 July 2023 6:43 AM GMT (Updated: 8 July 2023 6:53 AM GMT)

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வழக்கம்போல வேலைக்குச் சென்றதும் இளம்பெண் தனது கள்ளக்காதலனை போன் செய்து வரவழைத்தார்.

பாட்னா

பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கள்ளகாதலனுடன் அடிக்கடி செல்போனில் பேச தொடங்கினார். பின்னர் இருவரும் தனிமையில் சந்திக்க விரும்பினர்.

கணவர் வேலைக்கு சென்றதும் இளம்பெண் போன் செய்து கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். இந்த நெருக்கமான சந்திப்பு அடிக்கடி தொடர்ந்தது. இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வழக்கம்போல வேலைக்குச் சென்றதும் இளம்பெண் தனது கள்ளக்காதலனை போன் செய்து வரவழைத்தார். அதன்படி தயாராக இருந்த கள்ளக்காதலன் இளம்பெண் வீட்டிற்கு வந்தார்.

இருவரும் கதவை பூட்டிக்கொண்டு தனி அறையில் உல்லாசமாக இருந்தனர். இதனை நோட்டமிட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். கதவை தட்டி இளம்பெண்ணின் பெயரைக் கூறி அழைத்தனர்.

அப்போது அவர்கள் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்து கொண்டு கதவை திறந்தனர். ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பொதுமக்கள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனை சரமாரியாக அடித்தனர். இதில் அவரது முகம் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து இளம்பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது தனது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருந்ததை கையும் களவுமாக பிடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதனை கேட்டதும் அவர் உறைந்து போய் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் மனைவி கள்ளக்காதலனை அங்குள்ள சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்தார்.

இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது இளம்பெண் தனது தவறை உணர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார். அந்த நேரத்தில் கள்ளக்காதலன் இளம்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்தார்.

நான் வேலைக்கு சென்ற நேரத்தில் என்னை ஏமாற்றி கள்ளகாதலனை சந்திக்க வேண்டாம். உன் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் எனக் கூறி கணவன் ஆசீர்வதித்தார்.

கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்த இளம்பெண் கள்ளக்காதலுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கள்ளக்காதனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story