உ.பி.யில் கடந்த முறை இழந்த 14 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம்


உ.பி.யில் கடந்த முறை இழந்த 14 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம்
x

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த முறை இழந்த 14 எம்.பி. தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி, உத்தி வகுக்கிறது. 4

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த முறை இழந்த 14 எம்.பி. தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி, உத்தி வகுக்கிறது. 4 மத்திய மந்திரிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தத் தேர்தலில் வென்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமர்வதற்கான வியூகங்களை பா.ஜ.க. வகுத்து வருகிறது.

மேலும், தேர்தலுக்கான களப்பணிகளில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. இப்போதே தீவிரம் காட்டத்தொடங்கி விட்டது.

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் 80 எம்.பி. தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகும் என்பதால் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. தனிக்கவனம் செலுத்த விரும்புகிறது.

கடந்த 2019 தேர்தலில் அங்கு 14 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த தொகுதிகள், பிஜ்னோர், அம்ரோஹா, மொரதாபாத், சம்பல், ரேபரேலி, கோசி, லால்கஞ்ச், ஜான்பூர், அம்பேத்கர்நகர், காசிப்பூர், சிரேவஸ்தி, மெயின்புரி, சஹாரன்பூர், நாஜினா ஆகும்.

இவற்றில் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வென்றதாகும்.

சமாஜ்வாடி கட்சி, மெயின்புரி, சம்பல் உள்ளிட்ட 5 தொகுதிகளில் வென்றது.

பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த தேர்தலில் இந்த மாநிலத்தில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. பா.ஜ.க., அப்னாதளத்துடன் இணைந்து போட்டியிட்டு 64 இடங்களைக் கைப்பற்றியது.

ஆனால் இடைத்தேர்தல் மூலம் அசம்கார், ராம்பூர் தொகுதிகளை வென்றது.

இந்த நிலையில், கடந்த முறை வெற்றி பெறத்தவறிய 14 எம்.பி. தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. அதற்கான உத்தி வகுத்து வருகிறது.

இந்த தொகுதிகளில் உத்தி வகுத்து வெற்றி பெறுவதற்கான பொறுப்பு 4 மத்திய மந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது பற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

உ.பி.யில் கடந்த முறை வெற்றி பெறத்தவறிய 14 தொகுதிகளின் பொறுப்பு, மத்திய மந்திரிகள் நரேந்திரசிங் தோமர், அன்னபூர்ணா தேவி, அஷ்விணி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த தொகுதிகளின் பலம், பலவீனம், சவால்கள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து கண்டறிவார்கள். இவர்கள் முதல் கட்ட ஆய்வை முடித்து, கட்சி மேலிடத்தில் அறிக்கை அளித்து விட்டார்கள். மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் அமர்பால் மவுரியா அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார். 14 தொகுதிகளிலும் வெற்றி பெற கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story