பிஎப்ஐ தடைக்கு முக்கிய காரணம்: எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு


பிஎப்ஐ தடைக்கு முக்கிய காரணம்: எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு
x

தேசிய புலனாய்வு அமைப்பு சோத்னையில் எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு உத்தரபிரதேச பிஎப்ஐ தலைவரிடம் இருந்து கைபற்றப்பட்டது.

புதுடெல்லி

பாப்புலர் பிரண்ட் இந்தியாவின் 8 முன்னணி அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 8 மாநிலங்களில் 110 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது.

இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் நேற்று 2-வது முறையாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் 60 கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு இன்று அதிரடி தடை விதித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது.'

பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் வெடிகுண்டு தயாரிப்பு கையேடுகள் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன. இது "பயங்கரவாத தொடர்புகளை" காரணம் காட்டி தடை செய்யப்பட்டு உள்ளது.

எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி வெடிபொருட்களை எப்படி தயாரிப்பது என்பதற்கான அறிவுறுத்தல் கையேடுகள் கைபற்றப்பட்டு உள்ளன, உத்தரபிரதேசத்தில் உள்ள பாரபங்கியைச் சேர்ந்த பிஎப்ஐ தலைவர் முகமது நதீமிடமிருந்து அந்த ஆவணம் ஒன்று மீட்கப்பட்டது" என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ஐஇடி களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த ஒரு குறுகிய கையேடு என்ற தலைப்பில் ஆவணம் ஒன்று கோத்ரா, உ.பி.யின் பிஎப்ஐ தலைவர் அகமது பெக் நத்வியிடம் இருந்து மீட்கப்பட்டது," என்று அவர்கள் மேலும் கூறினர்.


Next Story