எல்லை விவகாரங்களை இருதரப்பு பேச்சுவார்த்தை வழியே தீர்க்க வேண்டும்; நேபாள பிரதமர் வலியுறுத்தல்


எல்லை விவகாரங்களை இருதரப்பு பேச்சுவார்த்தை வழியே தீர்க்க வேண்டும்; நேபாள பிரதமர் வலியுறுத்தல்
x

எல்லை விவகாரங்களை இருதரப்பு பேச்சுவார்த்தை வழியே தீர்க்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் நேபாள பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

நேபாளத்தில் புதிய பிரதமராக 3-வது முறை பொறுப்பேற்று கொண்ட பின்னர், புஷ்ப கமல் தஹல் பிரசண்டா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது இந்த வருகையின்போது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசியுள்ளார்.

இதன்பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக இன்று டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான சரக்கு ரெயில் போக்குவரத்து சேவை தலைவர்கள் இருவர் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதன்பின்பு, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றங்கள், பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் பிரசண்டா முன்னிலையில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் பற்றி உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து பேசிய நேபாள பிரதமர் பிரசண்டா, எல்லை விவகாரங்களை இருதரப்பு பேச்சுவார்த்தை வழியே தீர்க்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடியை நேபாளத்திற்கு வருகை தரும்படி நட்புணர்வுடன் அழைப்பு விடுத்து உள்ளேன். நேபாளத்தில் அவரை வரவேற்பதற்காக நான் எதிர்பார்த்து இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது, இந்தியாவுக்கான எனது 4-வது பயணம் ஆகும். இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான உறவு மிக பழமை வாய்ந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பற்றி நாங்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டோம். நாங்கள் கூட்டாக பல புதுமையான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story