நாடாளுமன்ற இரு அவைகளும் 8வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!


நாடாளுமன்ற இரு அவைகளும் 8வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!
x

மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 8-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளான இன்று அவை கூடிய உடன் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் கூடின. மாநிலங்களவையில் அமளி தொடர்ந்ததால் அவை மதியம் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜெகதீப் தங்கார் தெரிவித்தார். இந்நிலையில் மாநிலங்களவை மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. எதிர்க்கட்சிகளின் அமளியால், மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய மந்திரி அனுராக் தாகூர் மக்களவையில் தாக்கல் செய்த நிலையில், மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து மக்களவையும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story