மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணமகள்


மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணமகள்
x

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் மணமகள் மண்டபத்தில் வைத்து திடீர் என திருமணத்தை ரத்து செய்துள்ளார்.

லக்னோ

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு சிறப்பு மிக்க நாள். மணமக்கள் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் திருமண நாளில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆனால் சமீப காலங்களில் திருமணங்கள் சின்ன சின்ன காரணங்களுக்காக திடீர் என மணமேடை வரை வந்து நின்று விடுகிறது.

சாப்பாடு சரியில்லை, பேண்ட் வாத்தியம் வைக்கவில்லை மணமகன் தரப்பு வண்டியை அனுப்புவதில்லை எனப் பல காரணங்களுக்காக திருமணத்தை ரத்து செய்கிறார்கள். மணமகன் வீட்டார் கொடுக்கும் புடவை சரியில்லை, மணமகன் வீடு சிறியது, போதை பழக்கம் உள்ளவன் எனவே திருமணம் வேண்டாம் என்று பெண்கள் சொல்கிறார்கள்.

அதுபோன்ற சம்பவம் தான் இது... உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் மணமகள் மண்டபத்தில் வைத்து திடீர் என திருமணத்தை ரத்து செய்துள்ளார்.

உத்தரபிரதேசம் சவுசாம்பி மாவட்டம் பிப்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஷெர்பூரில் கடந்த மே 29ஆம் தேதி ஒரு திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது. திருமண நாளில் மணமகன் ஒரு பெரிய திருமண ஊர்வலமாக பெண்ணின் வீட்டிற்கு வந்தார். மணமகனுக்கு மாலை அணிவிக்க மணமகள் திருமண மேடைக்கு வரும் வரை எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டு இருந்தது. மணமகனுக்கு மாலை அணிவிக்க மணமகள் திருமண மேடையை அடைந்தது மாப்பிள்ளையை பார்த்தவுடன் மாலை அணிவிக்க மறுத்துவிட்டார்.

திடீர் என மணப்பெண் நிராகரித்தது அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மணப்பெண்ணின் முடிவு குறித்து கேட்டதற்கு, இவ்வளவு கருப்பான இளைஞரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று பதிலளித்தார். மேலும் மாப்பிள்ளைக்கு வயதாகிவிட்டதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. மணப்பெண் திருமணம் செய்ய மறுத்ததால், திருமண வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. பலர் அவள் மனதை மாற்ற முயன்றனர். ஆனால் மணமகள் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.அவரது முடிவை மாற்றுமாறு அவரது குடும்பத்தினர் வற்புறுத்த முயன்றும் பலனில்லை.

பின்னர், பஞ்சாயத்து கூட்டப்பட்டு, மணமகளை மீண்டும் சமாதானப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இறுதியாக மணமகன் தரப்பு மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. சிறுமியின் இந்த முடிவு பலத்த விமர்சனங்களைப் பெற்றது. சிலர் அவள் செய்தது சரி என்றும், சிலர் தவறு என்றும் விமர்சித்தனர்.

யாரை திருமணம் செய்வது என்பது பெண்ணின் விருப்பம் என மணமகளின் முடிவை சிலர் பாராட்டியுள்ளனர்.தோலின் நிறத்தை வைத்து ஆளுமையை அளப்பது சரியல்ல என்றார் சிலர் விமர்சித்தனர்.


Next Story