இளம்பெண் வரவேற்பாளர் கொலை; பாஜக தலைவர் மகனின் சொகுசு விடுதி புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டம்


இளம்பெண் வரவேற்பாளர் கொலை; பாஜக தலைவர் மகனின் சொகுசு விடுதி புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2022 7:15 AM GMT (Updated: 24 Sep 2022 8:05 AM GMT)

பாஜக தலைவர் மகனின் சொகுசு விடுதியில் 19 வயதான இளம்பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.

டெராடூன்,

உத்தரகாண்ட் மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. இவர் அம்மாநில மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா.

அம்மாநிலத்தின் பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகே புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதி உள்ளது. 'வனந்த்ரா' என்ற அந்த சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் கடந்த 18-ம் தேதி பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர்.

விசாரணையின் போது இளம் பெண் வரவேற்பாளர் அங்கிதாவை விடுதி உரிமையாளரான புல்கிட் ஆர்யாவே கொலை செய்தது தெரியவந்தது. அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி புல்கிட் ஆர்யா கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சொகுசு விடுதியில் பணியாற்றும் மேலும் 2 ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்த புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அங்கிதாவின் உடல் கால்வாயில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததால் அங்கிதாவை விடுதி உரிமையாளர் புல்கிட் கொலை செய்து கால்வாயில் வீசியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். மேலும், அங்கிதா வரவேற்பாளராக பணியாற்றி வந்த புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான 'வனந்த்ரா' சொகுசு விடுதியையும் இடித்து தள்ள முதல்-மந்திரி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு புல்டோசருடன் வந்த அதிகாரிகள் புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியை இடித்து தரைமட்டமாக்கினர்.


Next Story