தொழிலில் நஷ்டம் மதுபான விடுதி உரிமையாளர் தற்கொலை


தொழிலில் நஷ்டம்  மதுபான விடுதி உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 6:45 PM GMT)

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மதுபான விடுதி உரிமையாளர் 2-வது மனைவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெலமங்களா:-

மதுபான விடுதி உரிமையாளர்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புராவை சேர்ந்தவர் நாகேஷ். இவர் பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். அவர் பெங்களூரு காந்திநகர் பகுதியில் மதுபான விடுதி ஒன்றை நடத்தி வந்தார். அவர் தனது நண்பர்கள் உதவியுடன் இந்த விடுதியை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு போதிய வியாபாரம் இல்லை என்பதால், பெரும் இழப்பை சந்தித்துள்ளார். இதையடுத்து அவர் மதுபான விடுதியை மூடிவிட்டார்.

மேலும் வேலை ஏதும் செய்யாமல் இருந்து வள்ளார். இதற்கிடையே நாகேஷ் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார். மேலும் அவருடன் அன்னபூர்ணேஸ்வரி பகுதியில் வசித்து வந்தார். போதிய வருமானம் இல்லாததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் தனது 2-வது மனைவி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு ஒரு அறைக்கு நாகேஷ் சென்றார்.

தூக்கில் தொங்கினார்

அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரது 2-வது மனைவி அறைக்கதவை திறப்பதற்கு முயன்றார். மேலும் அவரை கதவை திறக்குமாறு கூறி உள்ளார். நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால், பயந்து போன 2-வது மனைவி, அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது நாகேஷ், தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்

மேலும் அவர்கள் இதுகுறித்து உடனடியாக அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தற்கொலை செய்த நாகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்து நாகேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story