ஆதிதிராவிடர்களுக்கான இலவச மின்சார திட்டம் ரத்து?; 'பெஸ்காம்' விளக்கம்


ஆதிதிராவிடர்களுக்கான இலவச மின்சார திட்டம் ரத்து?; பெஸ்காம் விளக்கம்
x

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டதா? என்பது குறித்து பெஸ்காம் விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூரு:

இலவச மின்சார திட்டம்

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்காக அமல்படுத்திய மாதம் 75 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக கூறி கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம்(பெஸ்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அரசு, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு மாதம் 75 யூனிட் வரையில் இலவச மின்சாரம் வழங்க கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 3-ந் தேதி வாபஸ் பெறப்பட்டது. அந்த உத்தரவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதால், அது வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இந்த இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தவறானது.

39 லட்சம் குடும்பங்கள்

இந்த திட்டத்தின் பயன் தகுதியான மக்களுக்கு சுலபமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஒரு செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது. அந்த செயலியில் தகுதியான நபர்கள், விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டம் மேலும் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயன் சுமார் 39 லட்சம் குடும்பங்களுக்கு கிடைக்கும். இதுவரை 4 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் பயனாளிகளுக்கு அவர்களின் மின் கட்டண தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களின் மொத்த மின் கட்டணத்தில் 75 யூனிட் கட்டணம் திரும்ப செலுத்தப்படுகிறது.

இவ்வாறு பெஸ்காம் தெரிவித்துள்ளது.


Next Story