பாலியல் பலாத்காரத்தினால் ஏற்பட்ட தேவையற்ற கர்ப்பத்தை கலைக்க அனுமதி - ஐகோர்ட்டு தீர்ப்பு!


பாலியல் பலாத்காரத்தினால் ஏற்பட்ட தேவையற்ற கர்ப்பத்தை கலைக்க அனுமதி - ஐகோர்ட்டு தீர்ப்பு!
x

பாலியல் பலாத்காரத்தினால் கருவுற்ற மைனர் பெண்ணின் 16 வார கருவை கலைக்க மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.

மும்பை,

பாலியல் பலாத்காரத்தினால் கருவுற்ற மைனர் பெண்ணின் 16 வார கருவை கலைக்க மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.

காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருந்தது விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அந்த சிறுமி தான் பொருளாதார ரீதியில் வசதி படைத்தவள் அல்ல என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கடுமையான மன உளைச்சலில் உள்ளதால் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.சந்தூர்கர் மற்றும் ஊர்மிளா ஜோஷி-பால்கே ஆகியோர் அடங்கிய அமர்வு, 16 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமர்வு, பாலியல் பலாத்காரத்தினால் ஏற்பட்ட கர்ப்பம் என்பதால் இது தேவையற்ற கர்ப்பம் என கோர்ட்டு கருதுவதாகவும், குழந்தையை பெற்றெடுக்க எந்த பெண்ணையும் வற்புறுத்த முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தது.

மேலும், மருத்துவர்களின் அறிக்கையின்படி மனுதாரர் 16 வார கர்ப்பமாக உள்ளார், பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பத்தை தொடர்ந்தால் அது பெண்ணின் வாழ்க்கை மற்றும் மன ரீதியாகவும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும், அதேபோல் குழந்தை பெற்றெடுத்தால் கூட அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண்ணுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு கருவை கலைக்க அனுமதி வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பொதுவாக ஒரு பெண் கருவை கலைக்க முடிவு செய்தால் 12 வாரத்திற்குள் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story