டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்..!


டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்..!
x

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழக அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் கோர்ட்டு கேட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து நாளை கூட இருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 22 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story